காஷ்மீரில் கடும் பனிச்சரிவு... பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குல்காம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஜவஹர் சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. அதில், அப்பகுதியில் இருந்த போலீஸ் சோதனை சாவடியும் சிக்கியது. இதில் போலீசார் உள்பட 20 பேர் சிக்கிக் கொண்டனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 12 பேர் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
குறிப்பாக, குல்காம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5 அடி வரை பனிகட்டிகள் குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது காணாமல் போன ஒரு போலீசின் உடலை மீட்டனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.