ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. பெண் போலீஸ் அதிகாரி பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், சிறப்பு போலீஸ் அதிகாரியாக (SPO) பெண் தீவிரவாதிகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் குஷ்பூ ஜன். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோபியான் மாவட்டத்தின், வெகில் என்ற கிராமத்தில் குஷ்பூ ஜன் வீடு அமைந்துள்ளது.
இன்று பிற்பகல் 2.40 மணிளவில், குஷ்பு ஜன் தனது வீட்டுக்கு வெளியே வந்தபோது, திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்பிறகு தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த குஷ்பூ ஜன், உடனடியாக பாதுகாப்பு படையினரால் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், குஷ்பு ஜன் உயிரிழந்ததுவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
கிண்டல், கேலி, சித்திரவதை.. மதுரையில் தற்கொலை செய்த மாணவர்களின் பரிதாபக் கதை!
துப்பாக்கிச் சூடு தகவல் தெரிந்ததும், அந்த பகுதி முழுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் துவங்கியுள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு மாதாந்திர ஊதியம் அடிப்படையில், மாநில காவல்துறையால், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு, துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்கு பயிற்சி அளிப்பது கிடையாது, அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை. எனவேதான் தீவிரவாதிகள் குறி வைத்து சிறப்பு போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.