சிஆர்பிஎப் வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது காஷ்மீர் வாலிபர்.. 10 கி.மீ தூரத்தில்தான் வீடு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்களை கொன்ற தீவிரவாதி, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வசித்து வந்தவர். அவரை வைத்து, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு தாக்குதலை அரங்கேற்றியுள்ளது, என்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத் தர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளார்.
காஷ்மீரின் தெற்கில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தின் குண்டிபாஹ் கிராமத்தைச் சேர்ந்த அடில் அஹம்த், 'வகாஸ் கமாண்டோ குண்டிபாஹ்' என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிப் படிப்பை நிறுத்தி உள்ளார்.
44 வீரர்கள் பலி
புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத் தர், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், சி.ஆர்.பி.எப் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினான். இதில், பஸ் வெடித்துச் சிதறியதில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கத்தில் இருப்பேன்
நேற்று தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் அடில் அஹமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. வீடியோவில், ‘என் பெயர் அடில் அஹமத். நான் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் ஓராண்டுக்கு முன்னர் சேர்ந்தேன். நான் எதற்காக ஜெய்ஷில் சேர்ந்தேனோ, அதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோ உங்களை வந்து சேரும்போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு இதுவே எனது கடைசி செய்தி' என்றும் குறிப்பிட்டு இருந்தான்.
குழப்பம்
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டதால், அந்த அமைப்பிலிருந்து ஒருவர் இப்படியொரு தாக்குதலில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும் என்று புலனாய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் குழம்பியுள்ளனர்.
தற்கொலைப் படை தீவிரவாதி
‘அடில் அஹமத், உள்ளூரில் ஜெய்ஷ் அமைப்பால் பணிக்கு அமர்த்தப்பட்ட மூன்றாவது தற்கொலைப் படை தீவிரவாதி' என்கின்றனர் புல்வாமா போலீசார். மேலும், இதற்கு முன்னர் இருந்த இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகளும் முறையே 2000 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு ராணுவ வீரர்களையும் கொன்றுள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.