ஜம்மு காஷ்மீர் இன்று நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
ஶ்ரீநகர்: நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் இன்று நள்ளிரவு முதல் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது ஆகஸ்ட் 5-ந் தேதி நீக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பானது இன்று நள்ளிரவு முதல் (அக்டோபர் 31 முதல்) நடைமுறைக்கு வருகிறது. சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்கிறார்.
சட்டசபை அல்லாத லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்துர் பொறுப்பேற்கிறார். இந்த இரு துணை நிலை ஆளுநர்களுக்கும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
துணை நிலை ஆளுநர்களின் பதவியேற்பில் இருந்து புதிய யூனியன் பிரதேசங்கள் மாற்றம் தொடங்கும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரான முர்மு, குஜராத் மாநிலத்தின் 1985 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் மத்திய நிதி அமைச்சகத்தில் செலவினங்கள் துறை செயலாளராகப் பணியாற்றியவர்.
வறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சு
லடாக் துணை நிலை ஆளுநர், மாத்துர் 1977-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. பாதுகாப்புச் செயலாளராக, தலைமை தகவல் ஆணையராகவும் பணியாற்றியவர். நாட்டின் இரும்பு மனிதரான முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் நாளை ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படும் நிலையில் புதிய 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.