உறுதி அளித்த தலைவர்கள்.. ஜம்முவில் 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டு இருந்த, ஜம்முவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பிறப்பிக்கப்பட்டது. தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது.
எந்த தடையும் இல்லை
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தடையும் இல்லை என காஷ்மீர் அரசு விளக்கம் அளித்துள்ளது.
வீட்டுக்காவல் இல்லை
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மாநிலத்தித்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஜம்முவில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்,.
சிறப்பு அந்தஸ்து குறித்து
ஜம்முவில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜம்முவில் இயல்பு நிலை முழுமையாக திரும்பிய நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்தோ, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு குறித்தோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என உறுதி அளித்ததையடுத்து அந்த தலைவர்களுக்கு வீட்டுக்காவல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர்களின் நிலை
அதேநேரம் காஷ்மீரைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களுக்கான தடுப்புக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்..
அதிகாரி தகவல்
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் ஸ்ரீநகர் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் 58 நாட்களாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமாக காவலில் வைக்கப்படவில்லை என்றும், அவர்களால் அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காஷ்மீர் உயர்அதிகாரிகள் கூறினர்.