ஜம்மு-காஷ்மீரில் தொடர்கிறது வேட்டை… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
சோபியான் மாவட்டத்தின் மீமண்டர் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனையடுத்து, பதிலடி தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தி, தீவிரவாதிகள் இருவரை சுட்டுக் கொன்றனர். அதேநேரம் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். என்கவுண்டர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று இரவில் இருந்து பாகிஸ்தான் படையினர் எல்லைக்கோட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருகிறது.