லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை- கேஜ்ரிவால் ராஜினாமா?
டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை முதல்வ அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அதை சபையில் அறிமுகப்படுத்த சபாநாயகர் அனுமதி மறுத்தார். ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜன்லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். டெல்லி சட்டமன்ற கூட்டத்தை ராம் லீனா மைதானத்தில் நடத்தி, மக்கள் முன்னிலையில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என சபாநாயகருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவுரை கடிதம் அனுப்பினார். ஆனாலும் டெல்லி சட்டப்பேரவையில், நேற்று ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இன்று டெல்லி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் ஜன்லோக்பால் மசோதா மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜன் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
கெஜ்ரிவால் சிரமம்
முதல்வர் கேஜ்ரிவால் கடும் தொண்டை வலி , அடைப்பு மற்றும் இருமல் காரணமாக எதுவும் பேச முடியாமல் இருந்து வந்தார். அவ்வப்போது எழுந்து இருமிக்கொண்டிருந்தார். எழுந்து நின்று ஏதாவது பதில் சொல்லலாம் என எழுந்து நிற்கவே முடிந்தது. கன்னத்தில் கை வைத்தப்படி அவையில் அமைதியாக சுற்றும் ,முற்றும் பார்த்து கொண்டிருந்தார். சில நேரங்களில் எழுந்து சில வார்த்தைகள் பேசினார்.
முதல்வர் கேஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் அவருக்கு இருமல் இருந்து வருகிறது. மதியம் 3. 45 மணி அளவில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் அமளிக்கு இடையே சட்டசபையில் ஜன் லோக்பால் தாக்கலானது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன். இதன் மீது விவாதம் நடத்துவதா அல்லது ஓட்டெடுப்பு நடத்துவதா என்பது குறித்து அவை முடிவு செய்யும் என்றார்.
தொடர்ந்து கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை சபாநாயகர் எம்.எஸ்.திர் ஒத்தி வைத்தார்.
சபாநாயகர் ஓட்டெடுப்பு
அதன் பின்னர் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யலாமா? அல்லது வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது புதிய திருப்பமாக 42 எம்.எல்.ஏக்கள் ஜன்லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் ஆத்மியின் 27 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஜன்லோக்பால் மசோதாவை ஆதரித்தனர்.
இதனால் ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்ய சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து சபையின் இதர அலுவல்கள் நடைபெற்றன.
கேஜ்ரிவால் ராஜினாமா?
இப்படி ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் முதல்வர் கேஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்தபடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.