பணமதிப்பு நீக்கத்தால் மெதுவாக ஏறும் ஜிடிபி வளர்ச்சி... பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு வீண்
இந்தியாவின் ஜிடிபி 6.1% அளவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 % ஆக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தது வீணாக போயுள்ளது.
டெல்லி: சென்ற மார்ச் காலாண்டில் இந்தியாவில் ஜிடிபி 7.1% வளர்ச்சி இருக்கும் என சந்தைப் பொருளாதர வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில் அது 6.1% வளர்ச்சியாக குறைந்திருக்கிறது. இந்த அளவை எட்ட பண மதிப்பு நீக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.
2016-17 நிதியாண்டின் இறுதி காலாண்டில், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம் 6.1 சதவீதம் வளர்ந்துள்ளதாக நாட்டின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நாட்டின் ஜிடிபி, கடந்த டிசம்பர் காலாண்டில் 7% வளர்ச்சி இருந்தது. பண மதிப்பு நீக்கம் காரணமாகக் கட்டுமான துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல நிதிச்சேவை பிரிவிலும் வளர்ச்சி இல்லாததால் மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 6.1 % இருக்கிறது. மார்ச் காலாண்டில் 7.1% வளர்ச்சி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில் வளர்ச்சி குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி விகிதம்
சென்ற நிதி ஆண்டில் உற்பத்தித் துறையில் 7.9% வளர்ச்சி இருந்தது. நாட்டில் ஹோட்டல் , போக்கு வரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் ஆகிய துறைகள் 7.8% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. விவசாயம் 4.9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சுரங்கத்துறை 1.8% வளர்ச்சி அடைந்திருக்கிறது. கட்டுமானத்துறை 3.7% குறைந்திருக்கிறது.
பாதிப்புகள்
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என பொருளாதர வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த 86% வங்கி நோட்டுக்கள் மீதான தடை இந்திய பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைத்துறை ஆகிய பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புள்ளிவிவரங்கள் தரும் தகவல்கள்
பொருளாதார புள்ளி விவரங்கள், பொருளாதார வளர்ச்சி மீட்பு எதிர்பார்த்ததை விட வேகமாக இருந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனாலும் மிக அண்மைக்கால புள்ளி விவரங்கள் இந்திய பொருளாதாரத்தை முழுமையாக எடுத்துக்காட்டவில்லை.
சிறுவணிகம் கணக்கில் வரவில்லை
தற்போது வெளியிடப்பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி விவரங்கள், நாட்டிலுள்ள சிறு வணிகங்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளின் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேலாக இவ்விரு துறைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லாத ரூபாய் அறிவிப்பால் பாதிப்பு
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி அவற்றின் புழக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையால்தான் சிறுவணிகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல சிறிய நிறுவனத்தினர் இந்தியா முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்னமும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.