துரோகம் செய்த ராஜ்நாத், வசுந்தரா: சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஜஸ்வந்த் சிங் சாடல்!!
பார்மர்: தாம் போட்டியிடும் கடைசி லோக்சபா தேர்தலில் வாய்ப்பு தராமல் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவும் துரோகம் செய்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் தொகுதி சிட்டிங் எம்.பியாக இருப்பவர் பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங். சில காலம் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தார் ஜஸ்வந்த்சிங்.
அண்மையில் தாம் போட்டியிடப் போகும் கடைசி லோக்சபா தேர்தல் என்பதால் தமக்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேட்சையாக பார்மர் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என்றும் ஜஸ்வந்த்சிங் அறிவித்தார்.
இருப்பினும் ஜஸ்வந்த்சிங் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. பார்மர் தொகுதியில் கேணல் சோனாராம் செளத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஜஸ்வந்த்சிங்.
இதனிடையே ஜஸ்வந்த்சிங் மகனும் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏவுமான மன்வேந்திரா திடீரென தமக்கு ஒரு மாதம் லீவ் வேண்டும் என்று பாஜகவிடன் அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த்சிங் இன்று சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தமது ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
துரோகம் செய்துவிட்டனர்- குமுறிய ஜஸ்வந்த்சிங்
வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் தமது ஆதரவாளர்களிடையே ஜஸ்வந்த்சிங் பேசியதாவது:
தற்போது நடக்கும் யுத்தம் ஒரு ஜஸ்வந்த்சிங்குக்கும் பாஜகவுக்கும் இடையேயானது அல்ல.. பாஜக தொண்டர்களுக்கும் பாஜக தலைமைக்குமானது.. நான் ராஜ்நாத்சிங்கை தலைவராக ஆதரித்தேன். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவை ஆதரித்தேன். ஆனால் அவர்கள் என்னை ஆதரிக்காமல் துரோகம் செய்துவிட்டனர்.
பாரதிய ஜனதா கட்சி தமது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்கிறது. முன்னர் சிம்லா மாநாடு முடிந்தவுடன் பாஜகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். ஒரு ப்யூனைக் கூட அவலவு மோசமாக நடத்தியிருக்கமாட்டார்கள்..அந்த அளவு மோசமாக நடத்தப்பட்டேன்.
கடந்த 9 முறை எம்.பியாக இருந்துவிட்டேன். 10வது மற்றும் கடைசி லோக்சபா தேர்தல் எனக்கு இது. அதனால் நான் போட்டியிடுகிறேன் என்று கூறி 3 தொகுதிகளைக் கேட்டேன். அதில் பார்மர் முதலாவது தொகுதி. இதை அத்வானி ஏற்றுக் கொண்டார்.
ஆனால் கடந்த 19-ந் தேதியன்று பார்மர் தொகுதியில் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று அதிர்ச்சி தகவலைக் கொடுத்தனர். அதுவும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து வந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து என்னை அவமானப்படுத்திவிட்டனர்.
இது துரோகம் மட்டும் என்று சொல்லமாட்டேன்.. கட்சியின் மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாத சர்வாதிகாரத்தனம் என்றும் கூறுவேன்.
இவ்வாறு ஜஸ்வந்த்சிங் பேசினார்.