தமிழக ஆளுநராக ஜஸ்வந்த்சிங் நியமனம்?
டெல்லி: பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட 19 மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஹரியானா உள்பட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் ஆளுநர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பாரதிய ஜனதாவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் தமக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் ஜஸ்வந்த்சிங்.
இதனால் அவரை பாஜக சஸ்பென்ட் செய்திருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்தும் பேசியிருந்தார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை கைவிடப்பட்டு தமிழக ஆளுநராக விரைவில் அவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.