தொடர்ந்து கோமா நிலையில் ஜஸ்வந்த சிங்... நேரில் சென்று பார்த்தார் மோடி!
டெல்லி: தலைக்காயம் காரணமாக சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை நேற்று நேரில் சென்று பார்த்தார் பிரதமர் மோடி.
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதி அமைச்சர் பதவி வகித்தவர், ஜஸ்வந்த் சிங் (76). வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார். பாஜக தலைவரான அவருக்கு அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விரும்பியத் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்தநிலையில், கடந்த வியாழன்று இரவு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்வந்த்சிங், உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது ஜஸ்வந்த்சிங் கோமா நிலையில் இருப்பதும், தலையின் பின்பக்கத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய தலை உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் காயமடைந்த மண்டையோட்டின் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பதும், மூளைப்பகுதி வீங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உயிரை காக்கும் அறுவை சிகிச்சையை டாக்டர்கள் உடனடியாக மேற்கொண்டனர். அதற்கான உபகரணங்களும் பொருத்தப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
ஜஸ்வந்த்சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதை அறிந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் துணைத்தலை ராகுல் காந்தி ஆகியோர் ஜஸ்வந் சிங்கை அனுமதிக்கபட்டுள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ராணுவ மருத்துவமனைக்கு சென்று ஜஸ்வந்த் சிங்கின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் சிங்கின் உடல் நலம் பற்றி விசாரித்ததுடன் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரின் முக்கிய நாடி துடிப்புகள் சீராக உள்ளன என்றும் ஆனால் அவர் தொடர்ந்து சுய நினைவற்ற நிலையிலேயே இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.