நாளை சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்கிறார் ஜஸ்வந்த் சிங்- பாஜக மீது கடும் பாய்ச்சல்
ஜோத்பூர்: பாஜகவி்ல் சீட் மறுக்கப்பட்டுள்ள மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் நாளை சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் பாஜகவையும் அவர் கடுமையாக சாடியுள்ளார். தன்னை ஒரு டேபிள், சேர் போல பாஜக நடத்தி விட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அதே நேரத்தில் கட்சியை விட்டு விலகுவாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை ஜஸ்வந்த் சிங்.
பார்மர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார் ஜஸ்வந்த் சிங். ஆனால் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா உள்ளே புகுந்து குழப்பி விட்டார். சிங், தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பார்மர் தொகுதியில் ஜாட் சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே சிங்குக்கு சீட் கொடுத்தால் ஜெயிப்பது சிரமம். எனவே அவருக்குப் பதில் கர்னல் சோனா ராம் செளத்ரிக்கு சீட் தருமாறு அவர் கட்சி மேலிடத்தை நிர்ப்பந்தித்தார். இதை ஏற்று கட்சி மேலிடமும் செளத்ரிக்கே சீட் கொடுத்து விட்டது.
இதனால் கோபமடைந்த சிங், சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். நாளை தான் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சி மிகவும் முரட்டுத்தனமாக என்னிடம் நடந்து கொண்டுள்ளது. முதலில் எனது வேண்டுகோளை அட்ஜெஸ்ட் செய்ய முடியாது என்றார்கள். பின்னர் அட்ஜெஸ்ட் செய்வதாக கூறினார். நான் என்ன டேபிள் சேரா, அட்ஜெஸ்ட் செய்வதற்கு.
கட்சி நடந்து கொண்ட விதம் என்னை அவமானப்படுத்துவது போல இருந்தது. இதனால்தான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றார் 76 வயதான ஜஸ்வந்த் சிங்.
பார்ம்ர் தொகுதியில்தான் ஜஸ்வந்த் சிங் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்வந்த் சிங்குக்குப் பதிலாக நிறுத்தப்பட்டுள்ள சோனா ராம் செளத்ரி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்மர் சிங்குக்குச் சொந்த தொகுதியாக இருந்தாலும் கூட அவர் இதுவரை அங்கு போட்டியிட்டதே இல்லை. கடந்த 91 மற்றும் 91 ஆகிய தேர்தல்களில் அவர் ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். பின்னர் 2009 தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டால் அங்கு பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். காரணம், ஜஸ்வந்த் சிங் சார்ந்த ராஜ்புத் சமூக வாக்காளர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் ஜஸ்வந்த் சிங்குக்கே வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுவே அனேகமாக ஜஸ்வந்த் சிங்கின் கடைசி தேர்தலாக இருக்கும் என்பதால் நிச்சயம் அவர்கள் ஜஸ்வந்த் சிங்கை அவரது சொந்தத் தொகுதியில் வெ்ற்றி பெற வைப்பார்கள் என்றும் தெரிகிறது. எனவே பாஜகவுக்கு சிக்கலாகியுள்ளது.