ஜாட் போராட்டம் எதிரொலி: ராஜஸ்தானில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
ஜெய்ப்பூர்: இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஜாட் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஹரியானாவில் பெரும்பான்மை சமூகமான ஜாட் இன மக்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி கடந்த 15-ந்தேதி முதல் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கடந்த 19ம் தேதி முதல் இவர்களது போராட்டம் தீவிரமடைந்தது. ரோட்டக், ஜாஜார், பிவானி, சார், ஜிந்த், கைதால், குர்கான் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்து, ரயில் நிலையம் ஆகிய இடங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
சில இடங்களில் போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டுல் 10 பேர் பலியாகினர். மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டம் ராஜஸ்தானிலும் பரவியது. ராஜஸ்தான் மாநிலம் தோர்மி பகுதியில் ஆயில் டெப்போவின் அருகே பஸ் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதேபோன்று சிவார் பகுதியிலும் மற்றொரு பேருந்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் ரயில், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பாதுகாப்பு படைகள் அங்கு விரைந்துள்ளதாகவும், சில இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி. பாரத் லால் கூறியுள்ளார். இதையடுத்து தோல்பூர் மற்றும் பாராத்பூர் மாவட்டத்திலுள்ள ஜாட் இனமக்கள் அமைதியையும், மத நல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கோரிக்கை விடுத்துள்ளார்.