ஜாட் போராட்ட வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி- ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
சண்டிகர்: ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக ஜாட் சமூகத்தினர் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது.
இதரபிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 6வது நாளாக நேற்றும் நீடித்தது. ஜிந்த், ரோக்டக், பிவானி உள்ளிட்ட நகரங்களில் சாலைகளையும் ரயில்பாதைகளையும் மறைத்து ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது பெரும் கலவரம் வெடித்தது.
டெல்லி-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹ்டக் பைபாஸ் சாலையில் ஜாட் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
போலீசாரின் வாகனங்களை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், மாநில நிதியமைச்சர் அபிமன்யூவின் வீட்டிற்கும் தீ வைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. ரோக்டக் நகரில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு ராணுவ உதவியை நாடியதையடுத்து ஹரியானாவில் உள்ள 9 இடங்களுக்கு ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டதும் சுடும் உத்தரவுடன் ரோக்டக், பிவானி நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேராட்டத்தைக் கைவிட்டு அமைதிகாக்குமாறு ஜாட் சமூகத்தினருக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஹரியானா அரசும், மத்திய அரசும் விரும்பவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
வன்முறையை தொடர்ந்து, உடனடியாக துணை ராணுவப்படையினர், 1,000 பேர், போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். 8 மாவட்டங்கள் ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. பல்வேறு நகரங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி ஆகியோரும் இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
150 ரயில்கள் ரத்து
ஹரியானாவில் ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தால் 150 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.