அஸ்ஸாமில் நீடிக்கும் விமான மர்மங்களைப் போல 'பறவைகளின் தற்கொலை பிரதேசமும்/' புரியாத புதிர்தான்!
குவஹாத்தி: அஸ்ஸாமில் விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் உயரமான மலைகளில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதே அஸ்ஸாமில் விஞ்ஞானிகளால் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மாபெரும் புதிராகவும் இருக்கிறது 'ஜதிங்கா' என்கிற பறவைகளின் தற்கொலை பிரதேசம்.
அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள ஜதிங்கா. இதுதான் பறவைகளின் தற்கொலை பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
உண்மையில் பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன என்பதைவிட இந்த பகுதியில் பறக்கும் போது பறவைகள் மர்மமாக இறந்துவிடுகின்றன. குறிப்பாக செப்டம்பர், நவம்பர் மாதம் அமாவாசை இரவுகளில் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் கூண்டோடு இங்கு மாண்டுபோகின்றன./
இத்தனைக்கும் வேட்டையாடப்படுவதில்லை. அதே நேரத்தில் இந்த பறவைகள் எப்படி இறக்கின்றன என்பது யாருக்கும் புரியாத புதிர்.
பறவைகளின் மர்ம மரணங்கள் குறித்து சர்வதேச அளவில் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்தும் பார்த்துவிட்டனர். அப்பகுதியில் நிலவும் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி அல்லது பறவைகளைத் தாக்கும் வலிமையான காற்று போன்ற ஏதோ ஒரு காரணங்கள்தான் அவற்றின் மர்ம மரணங்களுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் இதற்கான விடை இன்னமும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. பறவைகள் இப்பகுதி நோக்கி பறப்பதும் மரணிப்பதும் இன்னமும் தொடர்கின்றன. இயற்கையை நன்கு அறிந்து வைத்திருக்கும் அப்பகுதி பழங்குடி மக்களுக்கு கூட இதற்கான விடை புரியவில்லை.
இதனால் இது பறவைகளின் தற்கொலை பிரதேசமாக இடம்பெற்றுவிட்டது. அஸ்ஸாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் ஜதிங்கா இடம்பெற்றுவிட்டது.