காஷ்மீரில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே விடிய விடிய துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள தாங்தார் செக்டாரில் இருக்கும் தயா காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நேற்று இரவு துப்பாக்கிச்சூடு துவங்கியது. இரவு முழுவதும் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார், 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தயா காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று இரவில் இருந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார், 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றார்.
துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.