சட்டீஸ்கரில் கொடுமை.. மனைவியின் அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற ராணுவ வீரர்
சட்டீஸ்கரில் மனைவியின் அந்தரங்க பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற ராணுவ வீரரின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ராணுவர் வீரர் ஒருவர் மனைவியின் அந்தரங்க பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்வதற்கு காரணம் அவருக்கு வேறு ஒரு திருமண உறவு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், பலோடாபஜார் - பட்டபார மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் சுரேஷ் மிரி(33). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை 6வது பட்டாலியனில் சமையல்காரராக வேலை செய்துவந்துள்ளார். இவருடைய மனைவி லஷ்மி(27).
சுரேஷ் மிரி சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பட்டபாரா மாவட்டத்தில் ஹவுசிங் போர்டு காலனியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் மிரிக்கும் அவரது மனைவி லஷ்மிக்கும் இடையே நேற்று புதன்கிழமை மதியம் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. இதனால் சுரேஷ் மிரி ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, லஷ்மி துணிகளை துவைக்க குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது பின்னாலேயே சென்ற அவரது கணவர் சுரேஷ் மிரி மனைவியைக் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் லஷ்மி மயக்கமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மின்சார வயர் மூலமாக லஷ்மி உடலில் அந்தரங்க பகுதிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் மிரி தனது மைத்துனர் ஜகத்துக்கு போன் செய்து தனது மனைவி நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பின்னர், ஒரு வாடகை வேனில் லஷ்மியின் பிணத்தை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள முஞ்சேலி மாவட்டத்தில் உள்ள சுரேஷ் மிரியின் சொந்த கிராமமான காஜ்ரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே அவருடைய மைத்துனர் ஜகத்திடம் தனது மனைவி நோயால் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த சுரேஷ் மிரியின் மைத்துனர் ஜகத் காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதோடு சுரேஷ் மிரியை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில், ராணுவ வீரர் சுரேஷ் மிரி வேறு ஒரு திருமணம் செய்துகொள்வதற்காக தனது மனைவியை மயக்கம் அடையும்வரை அடித்ததாகவும் பின்னர் அவருடைய உடலின் அந்தரங்கப் பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சி கொன்றதையும் ஒப்புகொண்டுள்ளார். மேலும், சுரேஷ் மிரி தனது மனைவியைக் கொலை செய்வதற்கு காரணம் அவருக்கு வேறு ஒரு திருமண உறவு இருக்கிறது என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.