ஜெ. வழக்கில் திருப்பம்.... மீண்டும் அரசு வக்கீலாக களமிறங்குகிறார் ஆச்சாரியா.. கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பணியாற்றியவர் ஆச்சாரியா. ஜெயலலிதா தரப்புக்கு வழக்கில் பின்னடைவு ஏற்பட இவரது வாதங்கள் ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்போதைய பாஜக அரசிடமிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் வந்த நெருக்குதல்களால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது சுய சரிதை புத்தகத்திலும் தெரிவித்திருந்தார்.
பவானிசிங் நியமனம்
இந்நிலையில், அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீடு செய்தபோது பவானிசிங்கை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசே நியமித்துக் கொண்டது. எனவே, இந்த நியமனத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துவிட்டது. மேலும் கர்நாடக அரசு தனது வாதத்தை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 28ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
சட்ட அமைச்சருடன் சந்திப்பு
இந்நிலையில், கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியாவை நியமிக்க மாநில அரசு திட்டமிட்டது. கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, இதுகுறித்து இன்று காலை ஆச்சாரியாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அப்போது அரசு வக்கீலாக ஆச்சாரியா வாதிட சம்மதமா என்று ஜெயச்சந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆச்சாரியாவும் சம்மதித்துள்ளார்.
விவரம் தெரிந்தவர்
ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா வழக்கு குறித்த முழு விவரமும் தெரியும் என்பதால், அவரே பொருத்தமானவர் என்று கர்நாடக அரசு கருதுகிறது. ஹைகோர்ட்டில், அப்பீல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக செல்ல வேண்டியிருந்தால், அப்போதும் ஆச்சாரியாவை கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஆச்சாரியா வந்தால் அவ்ளோதான்..
இந்நிலையில், ஆச்சாரியாவை அரசு வழகறிஞராக நியமித்து கர்நாடக அரசு இன்று மாலை ஆணை பிறப்பித்தது.
ஆச்சாரியா, வழக்கிற்குள் வந்துள்ளதால், மிகவும் ஆக்ரோஷமாக வாதங்களை எடுத்து வைப்பார் என்பதால், வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக சந்தேஷ் சவுட்டாவை நியமித்துள்ளது கர்நாடக அரசு. இவரும், ஏற்கனவே ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக இருந்தவராகும்.