ஜெ. அப்பீல்: 18 பக்க கர்நாடக தரப்பு வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார் பி.வி. ஆச்சாரியா!
பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வாதத்தை அவர் தாக்கல் செய்தார்.
ஜெ. அப்பீல் மனு மீதான விசாரணையில், அரசு வக்கீலாக செயல்பட்ட பவானிசிங் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதத்தை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனவே திமுகவின் அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பை எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து அளிக்க கூறியது.
அதன்படி அன்பழகன் தரப்பு நேற்று 81 பக்க வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்நிலையில், கர்நாடக அரசு இன்றுக்குள் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இதனிடையே கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியா இன்று நியமிக்கப்பட்டார். எனவே, அவரே வாதத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தார்.
இதன்பிறகு, மாலை 4 மணியளவில், 18 பக்கம் கொண்ட கர்நாடக தரப்பு வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆதாரப்பூர்வமாக அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.