கூட்டல் கணக்கு தவறை திருத்துவாரா நீதிபதி குமாரசாமி?: எஞ்சிய வாய்ப்புகள் என்னென்ன?
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் கூட்டல் தவறு உள்ளதா என்பதை இன்றும் நீதிபதி குமாரசாமி 2வது நாளாக சோதித்து பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தரப்பு பெற்ற கடன் தொகையை கூட்டியதில் கோடிக்கணக்கில் கணக்கு வித்தியாசப்பட்டுள்ள நிலையில், அந்த கணக்கின் அடிப்படையில் கொடுத்த தீர்ப்பும் கேள்விக்குறியாகிவிட்டது.
தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது, அரசு சிறப்பு வழங்கறிஞர் ஆச்சாரியாவும், இந்த தவற்றை சுட்டிக் காட்டியுள்ளார். கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, சட்டத்துறை செயலாளரை இதுகுறித்து ஆய்வு செய்ய பணித்துள்ளார்.
நீதிபதி ஆய்வு
இந்நிலையில், தீர்ப்பில் தவறு உள்ளதா என்பதை குமாரசாமி நேற்று ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது. ஸ்டனோக்கள் உதவியுடன் தவறுகளை குமாரசாமி பரிசீலித்ததாக தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.
தீர்ப்பை மாற்ற முடியாது
இந்நிலையில் இன்றும் குமாரசாமி, தீர்ப்பின் தவறுகளை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பிலுள்ள எழுத்துப் பிழை, கூட்டல் பிழைகளை திருத்த மட்டுமே நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. தீர்ப்பை மாற்ற சுப்ரீம்கோர்ட்டால்தான் முடியும்.
இணையத்தில் வருமா?
எனவே, தீர்ப்பின் கூட்டல் பிழைகளை, சரிசெய்து, அதை ஹைகோர்ட் இணையதளத்தில் வெளியட வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு குமாரசாமி தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இரு தரப்புக்கும் அழைப்பு
தீர்ப்பை மாற்ற வேண்டுமானால், அதுகுறித்து குமாரசாமி அறிவிக்க வேண்டும். இதன்பிறகு மாற்றப்பட்ட தீர்ப்பு வெளியிடப்படும் நாளில், வழக்கில் சம்மந்தப்பட்ட இரு தரப்பையும் கோர்ட்டுக்கு வரவழைக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் திருத்தப்பட்ட தகவல் கூறப்பட வேண்டும், பிறகு ஹைகோர்ட் வெப்சைட்டில் வெளியிடப்பட வேண்டும் என்று சில வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மனு தாக்கலுக்கு வெய்ட்டிங்?
மேலும், குமாரசாமி தானாகவே முன்வந்து தீர்ப்பை திருத்தாமல், யாராவது அதுகுறித்து மனு தாக்கல் செய்தால், திருத்த வாய்ப்பிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். எனவே, குமாரசாமி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதை இரு தரப்பும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.