கூட்டல் தவறை திருத்த சுப்ரீம்கோர்ட் போக வேண்டாம், ஹைகோர்ட்டாலே முடியும்! ஆனால்...
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்பில் ஏற்பட்டுள்ள கணித தவற்றை, உச்சநீதிமன்றம் செல்லாமல், ஹைகோர்ட்டே திருத்திக்கொள்ள முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 11ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஹைகோர்ட், ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக 8.12 சதவீதம் அளவுக்குதான் சொத்து சேர்த்துள்ளார் என்று கூறி அவரை விடுதலை செய்தது.
கோடிக்கணக்கில் தவறு
ஆனால், ஜெயலலிதா பெற்ற வங்கிக் கடன்களை கூட்டும்போது, அது ரூ.24.17 கோடி என்று நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். சரியாக கூட்டினால், அது ரூ.10.67 கோடியாகும். எனவே, வருவாய்க்கு மீறிய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 77 சதவீதமாகிவிடுகிறது.
தடை கோர ஆச்சாரியா திட்டம்
இந்த கணித தவறை வைத்து, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யும்போது, தீர்ப்புக்கு தடை கோரலாம் என்று அரசு வக்கீல் ஆச்சாரியா கூறியிருந்தார். அவ்வாறு தடை கோரினால், ஜெயலலிதா முதல்வர் பதவி பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
ஹைகோர்ட்டாலே முடியும்
ஆனால், சுப்ரீம்கோர்ட்டுக்கு போகாமலே, ஹைகோர்ட்டே தனது தவற்றை திருத்திக்கொள்ள முடியும் என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்ஷன் 362ன்படி, ஒரு கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு, கணித தவறு இருந்தால் அதை திருத்த முடியும்.
தீர்ப்பையே மாற்ற வேண்டும்
ஆனால், தீர்ப்பை மாற்றிச் சொன்னால், ஆச்சாரியா கூறியபடி, சொத்துமதிப்பு உயர்ந்துவிடும். எனவே, சொத்து மதிப்பை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பையே மாற்ற வேண்டி வரும். ஏனெனில், இந்த வழக்கை பொறுத்தளவில், அந்த கணக்கீடுதான், தீர்ப்பின் ஆதார புள்ளியாகும். அதையே மாற்றினால், தீர்ப்பு மாறுபட்டேயாக வேண்டும் என்பதே லாஜிக்.
பொறுத்திருந்து பார்க்க
எனவே, ஹைகோர்ட் தனது தீர்ப்பை திருத்த முன்வருமா, அல்லது சுப்ரீம்கோர்ட்டுக்கு போய் ஹைகோர்ட் தீர்ப்பை ஸ்டே செய்வதுதான் ஒரே வழியா என்பது விடை காணாத கேள்வியாகவே தொடருகிறது.