ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மைசூர் கோர்ட்டில் சந்தித்த வழக்கு!
மைசூர்: சொத்து குவிப்பு வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா சந்தித்தது போன்று, 55 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கை சந்தித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம், 1935ல், ஜெயா என்பவரை முதலில் திருமணம் செய்தார். பின், 1937ல், சந்தியாவை மணந்தார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஜெயா, 'ஜெயராமின் சொத்துகளில், எனக்கும் பங்கு வேண்டும்; ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்' என, வக்கீல் வேணுகோபால் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 1949-51ல், நடந்த இந்த வழக்கில், 'ஜெயாவுக்கு, 8,000 ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்' எ-ன, ஜெயராமுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 'ஜெயராமின் வீட்டில், எனக்கும் ஒரு பங்கு வேண்டும்' என, ஜெயா கேட்டபோது, சந்தியா மறுத்துவிட்டார். இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள், மைசூருவிலுள்ள வக்கீல் வேணுகோபாலிடம், இன்றும் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் வந்த சந்தியா
மைசூரு லட்சுமிபுரத்திலுள்ள, அந்த வீட்டின் ஒரு பகுதியை விற்றவுடன், 11 வயதான ஜெயலலிதாவுடன், சென்னைக்கு சென்ற சந்தியா, அங்கிருந்த அவரது சகோதரி அம்புஜாவுடன் தங்கியிருந்தார்.
சினிமாவில் நடித்த சந்தியா
இவர், 'வித்யாவதி' என்ற பெயரில், அப்போது கன்னடம், தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்தார். அவரது சிபாரிசின்படி, சந்தியாவும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஜெ. பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை சென்றவுடன், நடன பயிற்சி எடுத்த ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்துக்கு, அப்போதைய கர்நாடகா முதல்வர் ஜாட்டி, சிவாஜி கணேசன் தலைமை வகித்தனர்.
மைசூர் வீட்டில்
ஜெயலலிதாவின் மைசூரு வீட்டில், தற்போது, 'தனியார் கிளப்' நடக்கிறதாம்.
ஜெயலலிதாவின் தந்தை, ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவுக்கு பிறந்த வாசுதேவன், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவிலுள்ள ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறாராம்.
கர்நாடக நீதிமன்றத்தில்
ஜெயலலிதாவின் தாயார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்ற படியேறினார் அது சொத்து வழக்கு. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக தற்போது பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.