காங்கிரசில் இணைகிறார் ஜெயப்பிரதா: மொரதாபாத் தொகுதியில் போட்டி
ஹைதராபாத்: சமாஜ்வாடி கட்சியில் இணைந்து இருமுறை எம்.பியான நடிகை ஜெயப்பிரதா, காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
1980-களில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் இந்திப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். அரசியலில் ஈடுபட விரும்பிய அவர், அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ராம்பூர் எம்.பி. என்று உத்தரபிரதேச மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங் கட்சியை விட்டு வெளியேறினார். அவருடன் ஜெயப்பிரதாவும் விலகினார்.
அமர்சிங் தனிக்கட்சி தொடங்கிய போது ஜெயப்பிரதா அதில் இணைந்து செயல்பட்டார். ஆனால் அந்தக்கட்சி மக்கள் மத்தியில் எடுபடாததால் ஜெயப்பிரதா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஜெயப்பிரதா டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார். மேலிடமும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவும் காங்கிரஸ் முன் வந்துள்ளது. ஆனால் ராம்பூர் தொகுதி கொடுக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக மொரதாபாத் தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று தெரிகிறது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ராம்பூரில் தற்போது சமாஜ்வாடி மந்திரி அசம்கான் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது மொரதாபாத்துக்கு தொகுதி மாறுவதன் மூலம் அசம்கானுடன் மோதுவதை தவிர்க்கலாம் என்று ஜெயப்பிரதா திட்டமிட்டுத்தான் மொரதாபாத் தொகுதிக்கு சம்மதித்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மொரதாபாத் தொகுதி கிரிக்கெட் வீரர் அசாருதீன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த முறை அவர் மேற்கு வங்காளத்துக்கு இடம் மாறுவதால் மொரதாபாத்தில் ஜெயப்பிரதா போட்டியிட முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.