பாரதிய ஜனதாவில் இணைகிறாராம் நடிகை ஜெயப்பிரதா!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன் என்று முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயபிரதா தெரிவித்து உள்ளார்.
திரைப்பட நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா, 1990களில் அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்குதேசம் கட்சியிலும் பின்னர் சமாஜ்வாடி கட்சியிலும் இணைந்து பணியாற்றினார்.
சமாஜ்வாடி கட்சி சார்பில் இரண்டுமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2010 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ராஷ்டிரீய லோக்தளம் கட்சியில் இணைந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து ஜெயப்பிரதா, பா.ஜ.க.வில் சேரப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக, பா.ஜ.க.வில் தாம் சேருவது குறித்து பேச்சு நடப்பதாக கூறி உள்ளார்.
பாஜகவின் தொண்டர்
''நான் பா.ஜ.க.வில் ஒரு தொண்டராக இணைய விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது. மேல்மட்ட அளவில் எனது வழிகாட்டியான அமர்சிங், இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார் என்று ஜெயப்பிரதா கூறியுள்ளார்.
மோடியின் தலைமை
இந்தியாவை முன்னெடுத்து செல்வதிலும், அதற்காக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் என்னை கவர்ந்து விட்டது. எனவே மோடியின் தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன். அந்தவகையில் ஆரோக்கியமான அரசியலையே நான் விரும்புகிறேன்.
கட்சியில் சேவை
பா.ஜ.க.வில் எந்த பதவியோ, தேர்தலில் போட்டியிட வாய்ப்போ கேட்கவில்லை. கட்சியில் இணைந்து சேவை செய்யவே விரும்புகிறேன்.
ஊடகங்களில் வதந்தி
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் ஊடகங்களால் வெளியிடப்பட்டவை. நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்றும் ஜெயப்பிரதா கூறியுள்ளார்.