ஜெ. வழக்கில் தர்மசங்கடம்: தப்பு கணக்கை திருத்தச் சொல்ல மூன்று தரப்புமே தயக்கம்!
பெங்களூரு: தீர்ப்பின் தவறை திருத்தினால் தீர்ப்பே மாறிவிடும் என்ற தர்ம சங்கடத்தில் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு கர்நாடக அரசு ஆகிய மூன்று தரப்புமே மவுனத்தில் உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு. வருவாய்க்கு அதிகமாக 8.12 சதவீதம் மதிப்புக்கு ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளதாகவும், எனவே அவர் விடுதலை செய்ய உகந்தவர் என்றும், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கூட்டலில் தப்பு
ஆனால், ஜெயலலிதா வாங்கிய கடன்களை சொத்துக்களாக மதிப்பிட்டுள்ள குமாரசாமி, கடன் தொகையை கூட்டியதில் தவறு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கடன் தொகையை சரியாக கூட்டினால், ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 75.76 சதவீதமாகிறது. எனவே, ஜெயலலிதா தண்டனைக்குள்ளாக வேண்டியவராகிவிடுகிறார்.
சுப்ரீம்கோர்ட்டால்தான் முடியும்
இந்நிலையில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக, விடுதலை கிடைத்தும், இந்த கணக்கு குளறுபடியால் ஜெயலலிதா முதல்வராவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கணக்கை சரி செய்ய சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு வாய்ப்பு இருந்தாலும், தீர்ப்பை மாற்றி எழுத இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் அனுமதி உள்ளது.
நீதிபதிக்கு தர்ம சங்கடம்
இதில்தான் ஒரு சிக்கல். என்னதான் கணித தவறை திருத்த நீதிபதிக்கு இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 362ன்கீழ், உரிமை இருந்தாலும், இந்த வழக்கில், குமாரசாமி அதை செய்வாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில், கணித தவறை சரி செய்தால், ஜெயலலிதாவை விடுவித்த தனது தீர்ப்பு தவறு என்று ஆகிவிடும் என்பது குமாரசாமிக்கும் தெரியும். அதேநேரம் கணக்கை சரி செய்யாமல் இருப்பது எப்படி என்பதும் விளங்கவில்லை. எனவே தர்மசங்கடத்தில் குமாரசாமி உள்ளார்.
ஜெ. தரப்பும் தயக்கம்
கணித தவறை சரி செய்யுமாறு ஜெயலலிதா தரப்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால், தவறை சரி செய்தால், தீர்ப்பு தவறாகிவிடுமே என்ற அச்சம் ஜெயலலிதா தரப்புக்கும் உள்ளது. எனவே, அவர்கள் மனு தாக்கல் செய்யாமல், கர்நாடக அரசின் நடவடிக்கையையே கவனித்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடகா போகாது
மற்றொரு பக்கம், கணக்கில் தவறு இருப்பதை திருத்துமாறு, கர்நாடக அரசும் கேட்கப்போவதில்லை என்பது தெரிகிறது. ஏனெனில், இந்த தவறுதான், உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு போகும்போது அரசு தரப்புக்கு 'துருப்பு சீட்டு'. இந்த தவறை சுட்டிக் காட்டியே, எளிதில், ஹைகோர்ட் தீர்ப்புக்கு ஸ்டே வாங்க அரசு தரப்பால் முடியும். எனவே, கணக்கை திருத்தச் செய்ய கர்நாடக அரசு கேட்டுக்கொள்ளாது என்றே தெரிகிறது.
திரிசங்கு சொர்க்கம்
எனவே, ஹைகோர்ட் தீர்ப்பின் கணித தவறு, திரிசங்கு சொர்க்கம் போல அங்கும் போகாமல், இங்கும் போகாமல் நடுவிலேயே நின்று கொண்டுள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற சொல்வழக்கிற்கு ஏற்ப, ஜெயலலிதா தரப்பு, அரசு தரப்பு மற்றும் நீதிமன்ற தரப்பு ஆகிய மூன்று தரப்புமே, இதில் தலையிடாமல் தள்ளியே நிற்கின்றன.