ஜிஎஸ்டியில் இட்லி மாவு, தாலி கயிறுக்கு வரி விலக்கு- ஜெயக்குமார் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இட்லிமாவு 40 பொருட்களுக்கு வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லி: வறுகடலை, இட்லிமாவு, தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தியதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் 20-வது கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தாலி கயிறு, மெட்டி
வறுகடலை, இட்லி, தோசை மாவு, 20 லிட்டர் மினரல் வாட்டர், அரசி, தவீடு, மீன்பீடி வலை, கயிறு, கோரைப்பாய், வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு, தாலிகயிறு , கைத்தறி, விசைத்தறி நெசவு உள்ளிட்ட பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்துமாவு
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஏசி இல்லாத ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 4 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுக்கு வரியை குறைக்க கோரியுள்ளதாக கூறினார்.
40 பொருட்களுக்கு வரி குறைப்பு
குடிநீர் கேன்களுக்கு விலக்கு தர கேட்டுள்ளோம் என்று செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் 40 பொருட்களுக்கு வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊறுகாய்க்கு 5%
மரச்சாமான்களுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும், 500 சிசி குறைந்த மோட்டார் சைக்கிளுக்கு வரி குறைப்பு, ஊறுகாய்க்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். பட்டு நூலுக்கு முழுவிலக்கு அளிக்கவும், பட்டு சரிகை மீதான வரியினை 5% குறைக்கவும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
ஆட்டோ உதிரி பாகங்கள்
பிராண்ட் இல்லாத இனிப்புகளுக்கு வரியை குறைக்க வேண்டும் எனவும், பம்பு செட்டுகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும், ஆட்டோ உதிரி பாகங்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.