ஜெ. வழக்கில்.... அப்பீல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - சித்தராமையா
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து அப்பீல் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக கர்நாடக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
ஜெயலலிதா வழக்கைப் பொறுத்தவரை கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசுதான் அப்பீல் செய்ய முடியும். இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவி புரிந்த திமுகவால் அப்பீல் செய்ய முடியாது. அதேசமயம், இந்த வழக்கை முதலில் தொடுத்தவரான சுப்பிரமணிய சாமி அப்பீல் செய்ய முடியும்.
ஆனால் அப்பீல் செய்வது குறித்து கர்நாடக அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பின் முழு விவரம் தெரியாது. தீ்ர்ப்பின் முழுவிவரமும் அறிந்த பின்னர், சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்த முடிவை கர்நாடக அரசு எடுக்கும் என்றார்.