ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு.. 16 அம்சங்களை விசாரிக்க கோரி கர்நாடகா பதில் மனு
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் எவை, எவை என்பது குறித்த பதில் மனுவை கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. மற்றொரு நீதிபதியாக பினாகி சந்திரகோஷ் தொடர்கிறார்.
இந்த விசாரணை கடந்த 8ம் தேதி நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக பதில் அளிக்க வேண்டும். அதில் விசாரணையின்போது எந்தெந்த அம்சங்களில் சந்தேகம் உள்ளதோ அந்த விஷயங்களை மட்டும் தெரிவித்து, பதில் இருக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும்" என கூறினர்.
இதையேற்று மூன்று தரப்பினரும், பதில் மனு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் கர்நாடக அரசு தனது பதிலை இன்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையில் விவாதிக்கப்பட வேண்டிய 16 அம்சங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.