மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா?
டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை.
பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சவுதாலா
இதனிடையில் தேர்தல் பிரசாரத்தில் சவுதாலா ஈடுபட்டு வருவதால் அவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. அதில், பொய்யான காரணத்தை கூறி அவர் பெற்றுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது. அதை ஏற்ற உயர் நீதிமன்றம், சவுதாலாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் பெருமையை குலைக்க கூடாது
சிபிஐ வாதத்தை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், "பிரசாரம் செய்வதற்கு, பயணம் மேற்கொள்வதற்கான முழு உடல்நலம் அவருக்கு உள்ளது. நீதிமன்றத்தின் பெருமையை, மரியாதையை குறைக்கும் வகையில் எவரும் நடப்பதை ஏற்க முடியாது. உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் அளித்ததை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுவதை ஏற்க முடியாது'' என்றார்.
ஜாமீன் ரத்து
அதைத் தொடர்ந்து நாளை (இன்று) சிறையில் சரணடையும்படி உத்தரவிட்டார். அதுவரை அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் கருதினால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி சித்தார்த் மிருதுல் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா வக்கீல்கள் கோரிக்கை
இதில் கவனிக்க வேண்டியது என்னெவன்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையிலுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், உடல்நிலை, வயதை காரணம் காண்பித்துதான் அவரது வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுள்ளனர். கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், சிறப்பு கோர்ட் தீர்ப்பில் குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிட்டு பெரும்பாலும் வாதிட்டனர். இந்நிலையில், ஹைகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஹைகோர்ட்டில் தவறான வாதம்
ஜாமீன் மனு தள்ளுபடியானதற்கு, ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் செய்த அடிப்படை தவறுகளே காரணம் என்று மூத்த வக்கீல்கள் பலரும் விமர்சனம் செய்தனர். ஜாமீன் கேட்கும்போது வயதானவர், எங்கும் தப்பி செல்லமாட்டார் என்ற அடிப்படை விஷயங்களை முன்னிறுத்தியே, கேட்க வேண்டுமே தவிர ஆயிரம் பக்க தீர்ப்பில் குறை கூறி ஜாமீன் கேட்டிருக்க கூடாது என்று மூத்த வக்கீல்கள் கூறினர்.
சவுதாலா வழக்கால் பாதிப்பா?
இதனையடுத்துதான், உச்சநீதிமன்றத்தில் வயது, உடல் நலம் போன்றவற்றை காரணம் காண்பித்து ஜெயலலிதா தரப்பினர் ஜாமீன் கேட்டுள்ளனர். ஒருவேளை உச்சநீதிமன்றம் இதன் அடிப்படையில் அடுத்த வாரம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கினாலும், ஜெயலலிதா பொது நிகழ்ச்சிகளிலோ, கட்சியின் பொது கூட்டங்களிலோ பங்கேற்க முடியாத சூழ்நிலையை சவுதாலா வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
தீவிர அரசியல் அவ்வளவுதானா?
ஏனெனில், உடல் நிலையை காரணம் காண்பித்து ஜாமீனில் வெளியே வந்த சவுதாலா, தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றதுதான் அவரது ஜாமீன் ரத்தானதற்கான காரணமாகியுள்ளது. ஜெயலலிதாவும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், இதேபோல ஜாமீன் ரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் யாராவது மனு தாக்கல் செய்ய கூடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் ரத்தாகும் வாய்ப்பு அதிகம். எனவே ஜாமீனில் வெளிவந்தாலும், தீவிர அரசியலில் ஈடுபட ஜெயலலிதாவுக்கு தடைகள் அதிகம்.