சசிகலா யாருக்கும் பினாமி கிடையாது.. சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கறிஞர் வாதம்
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது. ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.
இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்து வருகிறார்.
அரசு தரப்பு கூறியதை போல, சசிகலா, ஜெயலலிதாவின் அதிகார மையமாக இருந்தது கிடையாது என்று அவர் வாதத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் கூடுதல் அதிகார மையமாக சசிகலா இருந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் வாதிடுகையில், அரசு தரப்பு வாதம் முழுக்க குறைபாடு உள்ளது. வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டை, ஹைகோர்ட்டில், அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை.
ஹைகோர்ட் தெளிவாக தீர்ப்பு வழங்கிய பிறகும், இந்த வழக்குக்குள் திரும்பவும் ஏன் செல்ல வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது.
சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. ஜெயலலிதா-சசிகலா நடுவே பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று ஹைகோர்ட் தெளிவாக கூறிவிட்டது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக சொத்து குவித்தார்கள் என்று கூற முடியாது. இவ்வாறு வாதம் நடைபெற்றது.
இதையடுத்து வியாழக்கிழமைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அன்று சசிகலா தரப்பு இறுதிநாள் வாதத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.