இறந்து போனாலும் ஜெயலலிதாவும் குற்றவாளியே.. குற்றம் குற்றமே..!
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புப் படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் குற்றவாளிதான்.
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட் விடுவிக்கவில்லை. மாறாக அவருக்கும் சேர்த்துத்தான் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் அவர் உயிருடன் இல்லாததால் சிறைத் தண்டனையை மட்டும் விட்டு விட்டு அபராதத்தை மட்டும் கோர்ட் உறுதிப்படுத்தியது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் சிறைக்குப் போனார்கள்.ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியையும் இழந்தார். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நால்வரும் விடுதலைாயனார்கள். இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட சூழலில் மரணமடைந்தார் ஜெயலலிதா.
இருப்பினும் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்படவில்லை. மாறாக அவரது பெயரும் தொடர்ந்து நீடித்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பை அறிவித்தது உச்சநீதிமன்றம். அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கீழ் நீதிமன்றம் (குன்ஹா தீர்ப்பு) விதித்த தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி இந்த வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான். ஆனால் அவர் உயிருடன் இல்லாததால் சிறை தண்டனை மட்டும் இல்லை. மாறாக அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதம் உறுதியாகியுள்ளது. அந்த அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று வசூலிக்கவுள்ளது கோர்ட்.
ஜெயலலிதா மறைந்திருந்தாலும் கூட அவருக்கும் சேர்த்துதான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கூட இது நல்லதொரு பாடத்தை காட்டிச் சென்றுள்ளது.