ஸ்ரீரங்கத்தைக் கைவிட்டால்.... ஜெ. எங்கு போட்டியிடுவார்?... திருச்செந்தூரிலா, ஆண்டிப்பட்டியிலா??
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, எங்கு போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அவர் ஸ்ரீரங்கத்தில் நிற்க முடிவு செய்யாவிட்டால், திருச்செந்தூர் அல்லது ஆண்டிப்பட்டியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்டிமென்ட்டுக்காக, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனும், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவின் கோட்டையான தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட போவதாக தற்போது தகவல்கள் உலா வருகின்றன. ஏற்கனவே, ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பொறுப்பேற்று ராஜினாமா செய்து பன்னீர்செல்வத்திடம் பொறுப்பை கொடுத்து விட்டு மீண்டும் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.
அதே சென்டிமென்டுக்காக ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாகவும், இதற்காக, அதிமுகவினர் அத்தொகுதியில் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும், தேனி மாவட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா நிற்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் விரும்புகிறார். இதன் மூலம் தனக்கு எதிராக அரசியல் செய்யும் தங்கதமிழ் செல்வனை அரசியல் அரங்கில் ஒரங்கட்டி விடலாம் என நினைக்கிறார். பன்னீர்செல்வம் முயற்சி வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.