ஜெயலலிதா விடுதலைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஜெயசிம்ஹா
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்று கர்நாடக் சிறைத்துறை டிஐஜி பி.எம் ஜெயசிம்ஹா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டதை அடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார் ஜெயலலிதா.
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் லோகூர், சிக்ரி ஆகிய 3 பேரை கொண்ட அமர்வு பெஞ்ச் முன்னிலையில் ஜெயலலிதா மனு மீதான விசாரணை நடைபெற்றது ஜெயலலிதா தரப்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். பின்னர் நீதிபதிகள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி தீர்ப்பு கூறினர்
உச்சநீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதா இன்று மாலைக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விஷயங்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்ஹா அங்கேயே இருந்து கவனித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி செய்தியாளர்களுக்கு இவர் தான் அடிக்கடி தகவல் தெரிவித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றுதான் ஆரம்பிப்பார். தினமும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை சோதனை செய்து வருகிறது. அவரது உடல் ஆரோக்கியத்தை நாங்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது என்று தினம் தவறாமல் செய்தியாளர்களிடம் கூறுவார் ஜெயசிம்ஹா. தினசரி மூன்றுமுறை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிடுவார் ஜெயசிம்ஹா.
கடந்த 21 நாட்களாக ஜெயலலிதாவை நேரடியாக பார்த்து பேசிய அவர், ஜெயலலிதா விடுதலை பற்றியும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசிம்ஹா, ‘'பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜெயலலிதா இன்று மாலை முறைப்படி விடுதலை செய்யும் பணி பூர்த்தியாகும். அவரது விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. சிறை வளாகத்தை சுற்றி பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது'' என்று கூறினார்.