ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை: இறுதி வாதம் மீண்டும் ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் மார்ச் மாதம் 7ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 7ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இறுதி வாதத்தை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம் பவானி சிங் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்றும் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் மராடி ஆஜராகி பவானி சிங்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அதற்கான மருத்துவ சான்றிதழையும் அவர் சமர்பித்தார். இதையடுத்து இறுதி வாதம் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ஆஜரான எம்.பி. தாமரைச்செல்வன் இறுதி வாதம் செய்ய அனுமதி கோரினார்.
ஆனால் நீதிபதியோ இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகே வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.