அன்பழகன் என்ன வக்கீலா.. சட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறாரா.. நீதிபதி குமாரசாமி சரமாரி கேள்வி!
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது, வழக்கை தாமதப்படுத்த தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனுத் தாக்கல் செய்துள்ளதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
அப்போது அன்பழகன் என்ன வழக்கறிஞரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி குமாரசாமி, சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக கட்சி சார்பாக தலையிட அன்பழகனை அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் அரசு தரப்புக்கு உதவும் வகையில் தம்மை சேர்க்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று பிற்பகலில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தாமதப்படுத்த முயற்சி
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தாமதப்படுத்த தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனுத் தாக்கல் செய்துள்ளதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் குற்றம்சாட்டினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்பழகன் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்றும் அவர் வாதிட்டார்.
அவர் என்ன வழக்கறிஞரா?
இது தொடர்பான விசாரணையின்போது, அன்பழகன் சட்டத்துக்கு முன் வாதிட முடியுமா என்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
"அவர் (அன்பழகன்) வழக்கறிஞரா? ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டரீதியாக வாதிட அவருக்கு பயிற்சி இருக்கிறதா? இது குறித்து அவர் ஆய்வு எதுவும் மேற்கொண்டுள்ளாரா? இது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மேலும், சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக கட்சி சார்பாக தலையிட அன்பழகனை அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது." என்றார் நீதிபதி
7 வது நாளாக விசாரணை
இதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது, ஜெயலலிதா வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ், சிறப்பு விசாரணை நீதிமன்றம் பல தீர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது என்றும், பல்வேறு வருமான வரித்துறை உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும், வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒப்புக் கொண்டுள்ளது பற்றியும் முந்தைய தீர்ப்பு கண்டு கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.
சட்ட ரீதியாக
மேலும், 1991-96-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா சொத்துக்களை குவித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்றும், சொத்துக்களை சட்ட ரீதியாகவே அவர் வாங்கியுள்ளார் என்றும் வாதாடினார்.
பினாமி அல்ல
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளார் என்றும் வாதிட்ட நாகேஸ்வரராவ், சசிகலா, இளவரசி ஆகியோரின் சொத்துகளை ஜெயலலிதாவின் கணக்கில் சேர்த்தது தவறு என்றும், ஜெயலலிதா வீட்டில் இருந்ததை வைத்து சசிகலா, இளவரசியை பினாமியாக கருத முடியாது என்றும் கூறினார்.
வழக்கு விசாரணை நாளாக இன்றும் தொடருகிறது.