ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: லெக்ஸ் பிராப்பர்ட்டி மனுவை விசாரிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு!
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 33 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதால் 33 நிறுவனங்களின் சொத்தும் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் லெக்ஸ் பிராப்பர்ட்டி உள்ளிட்ட 5 நிறுவனங்கள் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட தங்கள் சொத்துக்களை விடுவிக்குமாறும் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது. இந்நிலையில் மேற்கூறிய 5 நிறுவனங்களும் இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், "முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலை இந்நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை என்பதால், அவற்றின் மதிப்பு தெரியவில்லை. 15 லட்ச ரூபாய்க்கு குறைவான சொத்துக்கள் இருந்தால்தான் அதனை ஒரு நீதிபதி கொண்ட அமர்வு விசாரிக்க முடியும். 15 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் அதனை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். எனவே இந்த மனுவை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று கூறி அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் எழுந்து, இது கிரிமினல் வழக்கு தொடர்புடையது என்பதால் கிரிமினல் வழக்கை விசாரிக்கும் அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.