ஜெ. வழக்கின் 6 நிறுவனங்களும் சொத்து குவிப்புக்காகவே பினாமியாக செயல்பட்டன: கர்நாடகா வக்கீல் வாதம்
டெல்லி: ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பதற்காகவே 6 நிறுவனங்களும் பினாமியாகவே செயல்பட்ட என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோரும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அந்தியார்ஜூனா, விகாஸ் சிங், வி.ஜி.பிரகாசம், பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோரும் ஆஜரானார்கள்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சேகர் நாப்டே, அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். இவர்களில் நாகேஸ்வரராவ், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகி உள்ளார்.
சித்தார்த் லுத்ரா வாதம்
இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா நேற்று முன் வைத்த வாதங்கள்:
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த நிறுவனங்களை விடுவித்து இருப்பது தவறானதாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாங்கி குவித்ததாக கூறப்படும் கடன் தொகைகள் மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விவரங்கள் தவறாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
குற்றவாளிகள் தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தியிருப்பது மற்றும் வங்கிகள் தந்ததாக கூறப்படும் கடன் தொகை பற்றியும் வருமானம் என்று தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. வருமான வரி பற்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தவறான கணக்குகளை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது கர்நாடக அரசை பிரதிவாதியாக குறிப்பிடாமல் தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவை பிரதிவாதியாக குறிப்பிட்டார்கள். இது தவறானதாகும். இது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வசதிக்காக செய்ததாகும்.
இந்த 6 நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறது. இந்த பணம் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. அவருடைய பணம் மற்றவர்கள் கணக்கில் காண்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனங்கள் 1994-ம் ஆண்டு வரை எந்தவிதமான வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இவை அனைத்தும் பினாமியாக காண்பிக்க மட்டுமே பயன்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டோர் இந்த நிறுவனங்களின் கூடுதல் இயக்குநர்களாக இருந்துள்ளனர். ஆனால் எந்த ஒரு பங்கையும் விலைக்கு வாங்காமாலேயே கூடுதல் இயக்குநர்களாக இருந்திருக்கின்றனர்.
இந்த நிறுவனங்கள் வருமான வரி கணக்கை மிகவும் தாமதமாகத்தான் தாக்கல் செய்துள்ளன. இந்த தாமத்துக்கு விளக்கம் அளிக்கவே 5 ஆண்டுகாலம் அவகாசம் எடுத்தும் இருக்கின்றனர். அதுவும் சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்துள்ளன.
6 நிறுவனங்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பில் விடுவித்தது அடிப்படையில் தவறானதாகும். இது நீதியை திசைமாற்றும் வகையில் அமைந்து உள்ளது.
இவ்வாறு சித்தார் லூத்ரா வாதிட்டார்.
ஹரின் ராவல் வாதம்
இதைத் தொடர்ந்து நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரின் பி.ராவல் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு கீழ்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி தவறானது. இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் 452-வது பிரிவின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியாது. கிரிமினல் அமென்ட்மெண்ட் அவசர சட்டத்தின் கீழ்தான் செய்திருக்க முடியும்.
கீழ் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்மானித்து அந்த சொத்துகள் எல்லாம் குற்றவாளிகளால் வாங்கப்பட்டது என்று தீர்மானித்தால் அந்த குறிப்பிட்ட சொத்தில் குற்றத்தின் அடிப்படையில் ஈட்டியதாக கூறப்பட்ட தொகை எவ்வளவு என்பதை கணக்கிடவேண்டும். அதன் அடிப்படையில்தான் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். இதன் அடிப்படையில் கீழ்நீதிமன்றம் செய்தது மிகவும் தவறானது.
மேலும் இந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் இருவர் மட்டுமே இயக்குநர்கள் கிடையாது. இவர்களைத் தவிர பலர் இந்த நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான சொத்துகளும் இந்த நிறுவனங்களில் உள்ளது.
இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்கோ அல்லது இந்த நிறுவனங்களில் இயக்குநர்களாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு மட்டுமே சொந்தமானதும் அல்ல. எனவே இப்படி பறிமுதல் செய்தது தவறானதாகும். அந்த தவறை கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பு சரிப்படுத்தி உள்ளது. எனவே கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு ஹரின் பி.ராவல் வாதிட்டார்.