நமது எம்.ஜி.ஆர். நாளேடு மூலம் பெறப்பட்ட ரூ.14 கோடியும் முறைகேடானது: பிவி ஆச்சார்யா வாதம்
டெல்லி: நமது எம்.ஜி.ஆர். நாளேடு மூலம் ஜெயலலிதாவுக்கு ரூ14 கோடி வருமானம் கிடைத்ததாக கூறப்படுவதும் முறைகேடானது தான் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா வாதிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இம்மனுக்கள் மீது கடந்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதியன்று இறுதி விசாரணை தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த 10-ந் தேதியன்று நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து 7-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை மீண்டும் தொடர்ந்தார்.
அப்போது ஆச்சார்யா முன்வைத்த வாதம்:
1991-96 கால கட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசியின் பெயரில் 36 தனியார் நிறுவனங்களை சட்ட விரோதமாக தொடங்கினார். இந்த நிறுவனங்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் பெயர்களில் 52 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இவற்றில் 48 சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளையின் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளது.
அந்த 52 கணக்குகளில் இருந்து பணத்தை சிறிது சிறிதாக எடுத்து பல சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் சந்தா மூலம் கிடைத்ததாக கணக்கு காட்டும் ரூ.14 கோடியும் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் காண்பிக்கப்பட்டவையாகும்.
நமது எம்.ஜி.ஆர். சந்தா திட்டத்தின் மூலம் இந்த பணம் பெறப்பட்டது என ஜெயலலிதா தரப்பு கூறுகிறது. ஆனால் அந்த நாளிதழில் அப்படியான எந்த ஒரு விளம்பரமுமே கொடுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பான செலவு 6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
திருமணத்துக்கான மொத்த செலவையும் மணப்பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள் செய்தனர். ஜெயலலிதா ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என அவரது தரப்பு கூறியுள்ளது.
ஆனால் 1998-ம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல் செய்த தனது வருமான வரி கணக்கில், சுதாகரனின் திருமணத்துக்கு ரூ.28 லட்சம் செலவிட்டதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பெங்களூர் தனி நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) திருமணத்துக்கான செலவை ரூ.3 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டது. இதனை வெறும் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கணக்கில் கொண்டது.
1991-96 காலகட்டத்தில் மாதம் ரூ.1 ஊதியம் பெற்ற ஜெயலலிதா ரூ. 66.65 கோடி சொத்து குவித்தது எப்படி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தவறான தீர்ப்பை ரத்து செய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை (நீதிபதி குன்ஹா) உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், திங்கட்கிழமையில் இருந்து ஹோலி பண்டிகை விடுமுறை ஒரு வாரத்துக்கு உள்ளதால் வழக்கின் மீதான விசாரணை வருகின்ற 29-ந் தேதி தொடரும் என்றனர். இதற்கு .ஆச்சார்யா, திருமணம் தொடர்பான செலவுகள் குறித்து எங்கள் தரப்பில் மேலும் வாதங்கள் உள்ளன. இதுதவிர அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மேலும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. அது முடிந்த பிறகு மற்ற சொத்துக்கள் பற்றிய வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த வாதங்களை ஏப்ரல் 1-ந் தேதி வரை இழுக்காமல் மார்ச் 31-ந் தேதிக்குள் முடித்து விடுவேன் என்றார்.
இதற்கு நீதிபதிகள் சிரித்துக் கொண்டே, தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஏப்ரல் 1-ந் தேதிக்கு அதனை இழுத்துச் சென்று எங்களை முட்டாள் ஆக்க வேண்டாம் என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.