சொத்துக் குவிப்பு வழக்கு: ஒத்திப்போட ஜெயலலிதா அடுத்த முயற்சி.. எதிர்க்க கர்நாடகம் திட்டம்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை, சுப்ரீம்கோர்ட்டில் தடங்கல் இன்றி தொடர்ச்சியாக நடைபெறவே கர்நாடக தரப்பு விரும்புகிறது. எனவே, ஜெயலலிதா தரப்பு கோரியபடி வழக்கை ஒரு வாரம் தள்ளி வைக்க கர்நாடக தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை வருகிற 23ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அன்று முதல் தினசரி விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரம் கழித்து எடுத்துக்கொள்ளுமாறு ஜெ. தரப்பு நேற்று, கோரிக்கை முன் வைத்தது. இந்த கோரிக்கையை மனுவாக சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் அளிக்குமாறு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், கர்நாடக தரப்பு, அன்பழகன் தரப்புக்கு, இத்தகவலை மெமோவாக அளிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், வழக்கை தள்ளி வைக்க ஜெயலலிதா தரப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு கர்நாடக தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் என அம்மாநில சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 29ம் தேதி ஜெயலலிதா தரப்பில் இதேபோன்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, விசாரணை நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேச அரசை கலைத்த வழக்கை விசாரித்து வந்ததால், கர்நாடக தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை இருந்தது. தற்போதும் அருணாச்சல பிரதேச வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே அடுத்த வாரம் வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால், தொடர்ச்சியாக விசாரணை நடப்பதையே கர்நாடக தரப்பு விரும்பும். ஒருவேளை பினாக்கி சந்திரகோஷ் பெஞ்ச் தொடர்ந்தால் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்காமல் வழக்கை தள்ளி வைக்க கர்நாடக தரப்பு ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.