மறுபடியும் மொதல்ல இருந்தா.. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை ஹைகோர்ட் மீண்டும் விசாரிக்கலாமே! தவே வாதம்
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்போது மூன்றே வாய்ப்புதான் இருக்கிறது, இதில் எதை கோர்ட் எடுத்துக்கொள்ளப்போகிறது என்று கர்நாடக தரப்பில் வாதிட்ட துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை, கர்நாடக ஹைகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் கடைசி நாள் வாதம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது கர்நாடக தரப்பில் மூத்த சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா வாதிட்ட பிறகு கர்நாடகாவுக்காக மற்றொரு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
3 வாய்ப்புகள்
அப்போது அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் முன்னால் இப்போது மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஹைகோர்ட் தீர்ப்பை உறுதி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தண்டனை தரலாம், அல்லது, தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு ஹைகோர்ட்டுக்கே வழக்கை திருப்பி அனுப்பலாம். இந்த மூன்று வாய்ப்புகளில் உச்சநீதிமன்றம் எதை எடுத்துக்கொள்ளப்போகிறது. இவ்வாறு தவே வாதிட்டார்.
ஜெயலலிதாவுக்கு அநீதி
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஹைகோர்ட்டுக்கே மீண்டும் வழக்கை திருப்பி அனுப்புவது என்பது குற்றம்சாட்டப்பட்டவருக்கு செய்யும் அநீதியாகும். அப்படி செய்வது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது என்ற அர்த்தத்தை கொடுக்கும் என்றனர்.
சந்தேகமே
நீதிபதிகள் கருத்தை வைத்து பார்க்கும்போது, சொத்துக்குவிப்பு வழக்கு, ஹைகோர்ட்டுக்கு மீண்டும் செல்லாது என்றே தெரிகிறது. ஆனால் இந்த விஷயத்தில், இன்னும் இறுதியாக எதையும் நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.
சம்மந்தம் இருக்கு
சசிகலா உள்ளிட்டோர் நடத்திய நிறுவனங்களால் ஜெயலலிதா, ஆதாயமடைந்தார் என்பதற்கான ஆதாரம் உள்ளதா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த ஆச்சாரியா, ஒரே வீட்டில் இருந்ததால் மட்டுமே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் சம்மந்தம் இருப்பதாக கூற முடியாது என்ற எதிர்தரப்பு வாதம் சரியில்லை என்றார்.
பரிசு பொருள்
துஷ்யந்த் தாவே வாதிடுகையில், ரூ.1.50 கோடி மதிப்புக்கு தொண்டர்களிடமிருந்து ஜெயலலிதா பரிசு பொருள் பெற்றதாகவும், அதை வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கூறுவதை ஏற்க முடியாது. இப்படி அனுமதிப்பது, ஊழலை ஊக்குவிக்கும். ஊழல் நாட்டின் பொருளாதரத்தை அழிக்கும் என்றார்.