ஜெ.வின் சட்ட விரோத காசோலை பரிமாற்றங்கள்: ஆதாரம் இருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சாரியா வாதம்
டெல்லி: ஜெயலலிதாவும், அவரை சார்ந்தோரும், பண பரிமாற்றங்களை காசோலைகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால், அது சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்ற பரிமாற்றம் என்ற தோற்றம் ஏற்படும் என்பது அவர்கள் திட்டம். ஆனால், இவர்கள் மேற்கொண்ட பண பரிமாற்றம் அனைத்துமே, சட்ட விரோதமானது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த ஆதாரங்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அவற்றை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது, என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆச்சாரியா வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா வாதத்தை முன்வைத்தனர்.
ஜெயலலிதா, சசிகலா தரப்பு
ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதத்தை முன்வைத்தார்.
ஆச்சாரியா வாதம்
இதையடுத்து கர்நாடக தரப்பில் பதில் வாதத்தை தாக்கல் செய்ய ஆச்சாரியாவுக்கு 2வது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்றுமுன்தினம் வாதத்தை தொடங்கினார். 2வது நாளாக நேற்றும், ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார்.
செவ்வாய்க்கிழமை
இன்றும் 3வது நாளாக, ஆச்சாரியா வாதத்தை தொடர்ந்தார். வியாழக்கிழமையான இன்றுடன், ஆச்சாரியா வாதத்தை முடித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சாரியா, தனக்கு இன்னமும் வாதாட நேரம் தேவை என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமைக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றும் ஆச்சாரியா தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். இதன்பிறகு நீதிபதிகள் தீர்ப்பு தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது.
திட்டமிட்ட பரிவர்த்தனை
இன்றைய வாதத்தில் ஆச்சாரியா கூறியதாவது: ஜெயலலிதாவும், அவரை சார்ந்தோரும், பண பரிமாற்றங்களை காசோலைகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால், அது சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்ற பரிமாற்றம் என்ற தோற்றம் ஏற்படும் என்பது அவர்கள் திட்டம்.
சட்ட விரோதம்
ஆனால், இவர்கள் மேற்கொண்ட பண பரிமாற்றம் அனைத்துமே, சட்ட விரோதமானது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்த ஆதாரங்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அவற்றை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
போலி நிறுவனங்கள்
போலியான சில நிறுவனங்களை ஆரம்பித்து, சட்ட விரோத பணத்தை சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்ற முயற்சி நடந்துள்ளது. இதையும், நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.
போலி கடன்
சசிகலாவுக்கு அன்பளிப்பாக ஜெயலலிதா பணம் வழங்குவதையும், அதன்பிறகு, அதே பணத்தை சசிகலாவிடம் கடன் வாங்கியதை போல ஜெயலலிதா வாங்கிக்கொண்டு சட்டத்திற்கு உட்பட்டதாக அதை காட்டிக்கொண்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.