கிரேட் எஸ்கேப்... ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் தேர்தலுக்கு முன் தீர்ப்பு இல்லை!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை. இந்த மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் மே 14-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஜூலை மாதம்தான் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ100 கோடி அபராதம் விதித்தார் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 20 நாட்களாக விசாரித்தது.
விறுவிறு இறுதி வாதங்கள்...
கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா வாதங்களை முன்வைத்தனர். இதேபோல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்பின்னர் கர்நாடகா அரசு தரப்பில் பதில் வாதங்களை ஆச்சார்யா முன்வைத்து வருகிறார்.
மே 14-க்குள் முடிக்க வேண்டும்
இந்த வாதங்கள் அனைத்தையும் மே 14-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கான கோடைகால விடுமுறை மே 15-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக அடுத்த வாரத்துக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் விரும்புகின்றனர்.
ஆச்சார்யா வாதம் முடிவடைகிறது...
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது பதில் வாதங்களை நிறைவு செய்ய இருக்கிறார்.
அதிகாரம் உள்ளதா?
அவர் தம்முடைய வாதங்களை நிறைவு செய்த பின்னர், கர்நாடகா அரசுக்கு மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ளதா? என்பது பற்றிய ஜெயலலிதா தரப்பு மனு, மதுரை வழக்கறிஞரின் மனு மீது மட்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுவும் முடிவடைந்துவிட்டால் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிடும். இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.
ஜூலையில் தீர்ப்பு?
கோடைகால விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 29-ந் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் இயங்க தொடங்கும். ஆகையால் ஜூலை முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகக் கூடும் என தெரிகிறது.
நிம்மதியில் ஜெ. தரப்பு
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு எப்படி வெளியானாலும் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து ஜூலை மாதத்தில்தான் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால் ஜெயலலிதா தரப்பு பெரும் நிம்மதியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.