சொத்துக் குவிப்பு வழக்கு: நேரில் ஆஜராக ஜெ.வுக்கு விலக்கு: சசி, இளவரசி, சுதாகரன் ஆஜராக உத்தரவு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. ஜெயலலிதாவை தவிர இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வரும் சனிக்கிழமை அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக ஆணையிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் இறுதிவாதம் நடைபெற்று வந்தது.
இந்த வாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்று அரசு தரப்பில் மிக நீண்டியல் பட்டியல் நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது.
இந்தப் பட்டியலை முன்வைத்து தமிழக தேர்தல் பிரசார களமும் சூடுபிடித்தது.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 5ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று இன்று காலை நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் ஜெயலலிதா ஆஜராகும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலையில் தான் அளித்த தீர்ப்பை பிற்பகலில் மாற்றி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா எப்போது ஆஜராக வேண்டும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
சிறப்பு நீதிமன்றம் முழுவதையும் ஒரே நாளில் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்ற முடியாது எனவும் நீதிமன்ற இடமாற்றத்துக்கு உயர்நீதிமன்ற அனுமதி பெறவேண்டியது அவசியமாகும். மேலும் தேர்தல் காலமாக உள்ளதால் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல் இருப்பதாக சிறப்பு நீதிபதி குன்ஹா கூறியுள்ளார்.
விசாரணையில் மறைத்தது ஏன்?
லெக்ஸ், மெடோ அக்ரோ நிறுவனங்களின் மனுக்களை நிராகரித்து பெங்களூர் நீதிமன்றம் பிப்ரவரி 22-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்ற விசாரணையின் போது மறைத்தது ஏன்? என்று ஜெயலலிதா, சசிகலா தரப்பிடம் நீதிபதி குன்ஹா காட்டமாக கேள்வி எழுப்பினார்.
2 நிறுவனத்தின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்துக்கு சென்றது ஏன் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கான முகாந்திரம் என்ன என்றும் கேட்ட நீதிபதி, இதற்கு விளக்கம் கேட்கவே ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
வழக்கை முடிந்தவரை இழுத்தடிப்பதில் குறியாக உள்ள ஜெயலலிதா தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதும் அந்த வகையிலான முயற்சியாகவே கருதப்படுகிறது. இந் நிலையில் அவர்களது இழுத்தடிப்பு செயல்களுக்கு தடை போடும் வகையிலேயே ஜெயலலிதாவை நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஜெயலலிதா தரப்பின் இழுத்தடிப்புகளுக்கும் கடிவாளம் போட நீதிபதி முயன்றுள்ளார்.