ஜெயலலிகாவுக்கு ஷுகர், கடும் முழங்கால் வலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி
பெங்களூர்: சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா கடும் முழகங்கால் வலி, நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக அவரை சந்தித்த அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பெங்களூர் நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள வி.வி.ஐ.பி. செல்லில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இரவுப் பொழுதை சிறை வளாகத்திற்கு வெளியே கழித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். ஏற்கனவே சர்க்கரை நோயாளியான ஜெயலலிதா தற்போது கடும் முழகங்கால் வலி, நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு சிறையில் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர். அவருக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சுதாகரன்:
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவருக்கு குளுக்கோஸ் கொடுத்துள்ளனர்.