ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது?
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்ற கேள்வி பல மட்டத்திலும் எழுந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான ஒரு அரசியல் தலைவர் தொடர்புள்ள வழக்கு என்பதால், இந்த ஆர்வம் இயல்பானதே.
நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கடந்த ஜூன் மாதம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதால், வழக்கு குறித்த பேச்சு ஓய்ந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா உடல் நலம் தேறிவருவதாக அப்பல்லோ தலைவரே சமீபத்தில், கூறிய நிலையில், வழக்கின் தீர்ப்பு எப்போது என கேள்விக்குறி எழுந்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், கர்நாடக லோக்ஆயுக்தாவின் முன்னாள் நீதிபதியுமான, சந்தோஷ் ஹெக்டேவிடம் இதுகுறித்து கேட்டபோது, "குறிப்பிட்ட காலத்திற்குள் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை வெளியிட்டாக வேண்டும் என்று நீதிபதிகளை நிர்பந்திக்க சட்டம் இல்லை. கோஸ் 2017லிலும், அமிதவா ராய் 2018ம், ஆண்டிலும், ஓய்வு பெற உள்ளனர்.
இதற்கு முன்பாக தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது. தீர்ப்பை வெளியிடும் முன்பு நீதிபதி பதவி ஓய்வு பெற்றால், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பது விதிமுறை என்றார் அவர்.
எனவே, ஜெயலலிதா, மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு, எப்போது வரும், எப்படி வரும் என யாருக்கும் தெரியாது என்பதே இப்போதைய யதார்த்தம்.