பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்குப் பின் விடுதலையானார் ஜெயலலிதா
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் இன்று விடுதலையானர். 22 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.
18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்பட 4 பேர்களும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதா உள்பட 4 பேர்களின் ஜாமீன் மனுக்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று ஜெயலலிதா உள்பட 4 பேர்களுக்கும் ஜாமீன் அளித்தது.
ஜாமீன் உத்தரவு
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு நகலை பேக்ஸ் மூலம் அனுப்ப முயன்றனர். இதற்காக மாலை 5 மணி வரை தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா காத்திருந்தார். வக்கீல்களும், உத்தரவின் நகல் வந்துவிடும் என்றனர். இதனால் கூடுதலாக 5.40 மணி வரை காத்திருந்தார். ஆனால் வரவில்லை. இதனால் அவர் புறப்பட்டு சென்று விட்டார்.
நீதிபதி குன்ஹா
வக்கீல்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில், அசோகன், செல்வகுமார் ஆகியோர் உத்தரவின் நகலை பெற்றுக் கொண்டு விமானம் மூலம் நேற்று இரவு பெங்களூர் வந்தனர். இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹாவிடம் உச்சநீதிமன்ற உத்தரவை வழங்கினார்கள்.
விடுதலையானார் ஜெ
அதை தொடர்ந்து நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதை பரிசீலனை செய்த பின்னர் ஜாமீனில் விடுதலை செய்வதற்கான உத்தரவை நீதிபதி குன்ஹா வழங்கினார்.
சென்னைக்கு புறப்பட்டார்
அதை முறைப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ககன்தீப் சிங்கிடம் வழங்கப்பட்டது. அவர் அதை பரிசீலனை செய்த பின் நான்கு பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பித்தார். இதனையடுத்து பிற்பகல் 3.20 மணிக்கு சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, தோழி சசிகலா உடன் கார் மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டார்.
தொண்டர்கள் கொண்டாட்டம்
சிறையில் இருந்து ஜெயலலிதாவின் வாகனம் வெளியே வந்த உடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பினர். பட்டாசு வெடித்தனர். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.