ஜெ. அப்பீல்: கர்நாடக அரசுக்கு இருக்கும் கடைசி இரு சந்தேகங்கள்! தயாராகிறது விளக்கம்!!
பெங்களூர்: ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக அமைச்சரவை முடிவெடுக்காமல் இழுத்தடிக்க சட்டத்திலுள்ள இரு சந்தேகங்கள் காரணமாக கூறப்படுகின்றது. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, சட்டத்துறையை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த பிறகு அடுத்த அமைச்சரவை கூட்டம் நடைபெறும் ஜூன் 1ம் தேதி, ஜெயலலிதா அப்பீல் வழக்கில் ஒரு இறுதிமுடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டப்பிரிவு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
முடிவில்லை
இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், விவாதப் பொருளாக ஜெயலலிதா அப்பீல் பிரச்சினையும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
சந்தேகம் உள்ளது
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் கேட்டபோது, "மாநில அட்வகேட் ஜெனரல் ஊரில் இல்லாததால் அமைச்சரவையில் முடிவெடுக்க முடியவில்லை. அவர் வந்த பிறகு சந்தேகங்கள் சிலவற்றை நிவர்த்தி செய்துவிட்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.
விளக்கம் கேட்ட அரசு
இந்த சந்தேகங்கள் என்னவென்பது தற்போது தெரிய ஆரம்பித்துள்ளது. மாநில அரசு, தனது சட்டத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இரு சந்தேகங்களை அனுப்பி வைத்துள்ளதாம். அந்த இரு சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தால் வரும் ஜூன் 1ம் தேதி கர்நாடக அமைச்சரவை மீண்டும் கூடுகிறது. அப்போது, ஜெயலலிதா விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கப்படும், இறுதி முடிவும் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
முதல் சந்தேகம்
சந்தேகம் நம்பர் 1, என்னவென்றால், ஜெயலலிதா தற்போது முதல்வராக பதவியிலுள்ளார். அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் (அல்லது எந்த ஒரு கோர்ட்டிலும்) வழக்கு தொடர முடியுமா என்பது கர்நாடக அரசின் முதல் சந்தேகம். ஏனெனில், முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்ட பதவி. அந்த பதவியிலுள்ளோருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அல்லது உச்சநீதிமன்ற அனுமதி தேவைப்படுமா என்பது கர்நாடக அரசுக்கு உள்ள சந்தேகமாகும்.
விளக்கம் ரெடி
இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகள் கூறுகையில், "முதன்முதலாக முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும்போதுதான், ஆளுநரின் அனுமதி அவசியமாகும். ஏற்கனவே பதிவான ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி தேவையில்லை" என்று தெரிவித்தனர். இதையே அரசுக்கு சிபாரிசாகவும் அனுப்பி வைக்க உள்ளனர் என்று தெரிகிறது.
அரசு வக்கீல் யார்?
கர்நாடக அரசின் 2வது சந்தேகம், அரசு சிறப்பு வழக்கறிஞர் பற்றியது. கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டபோது, சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல்படிதான், இவ்வழக்கின் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். எனவே, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரைப்படிதான், உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா, மனு தாக்கல் செய்யும்போது அரசு வக்கீலை நியமிக்க வேண்டுமா, அல்லது ஆச்சாரியாவே தொடரலாமா என்பது அந்த சந்தேகம்.
கர்நாடகாவுக்கு அதிகாரம்
இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வழக்கை நடத்தும் உரிமையுள்ள கர்நாடகாவுக்கு, அரசு வக்கீலை நியமிக்கும் உரிமை உள்ளது. பவானிசிங்கிற்கு பதிலாக, ஹைகோர்ட்டில் ஆச்சாரியாவை மீண்டும் அரசு வக்கீலாக நியமிக்கும்போது, கர்நாடக அரசே தன்னிச்சையாகத்தான் முடிவெடுத்தது. எனவே அதிகாரம் கர்நாடகாவிடம் உள்ளது" என்று தெரிவித்தனர். இதையே அரசுக்கு சிபாரிசாகவும் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
மேல்முறையீடு நிச்சயம்
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமலே இருந்துவிடுவது ஒரு திட்டமாக அரசிடம் இல்லை என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹைகோர்ட் தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிலையில், அதை நிவர்த்தி செய்ய மேல்முறையீடு செய்வதை தவிர கர்நாடகாவுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.