ஜெ.வுக்கு தனியார் மருத்துவமனை வசதி மறுப்பு... ஜெ. கமாண்டோக்கள்- போலீஸ் மோதல்!!!
பெங்களூர்: ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருப்பதால் அவரை சிறையில் அடைக்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அவரை சிறை வளாக மறுத்துவமனையிலேயே சிகிச்சை பெற உத்தரவிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன், கர்நாடக போலீசார் மோதலில் ஈடுபட்டதால் பெங்களூர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனிநீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து வக்கீல் நவநீதகிருஷ்ணன் எழுந்து ‘ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி ‘இதுகுறித்து சிறைத்துறை அதிகாரியிடம் முறையிடுங்கள்' என்று கூறினார்.
மருத்துவ வசதி
அதற்கு நவநீதகிருஷ்ணன் ‘ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருப்பதால் அவரை சிறையில் அடைக்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும்' என்று கூறினார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜெயலலிதாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் அங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஏற்கனவே காலை முதல் பெங்களூரில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இசட் பிரிவு பாதுகாப்பு
ஆகவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடக்கூடாது என்று உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிபதி, சிறையில் மருத்துவ வசதிகள் உள்ளது. ஜெயலலிதாவை அங்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கர்நாடக போலீசார் ஜெயலலிதாவை சிறைக்கு அழைத்து செல்ல தயாரானார்கள். அப்போது ஜெயலலிதாவுக்கு ‘இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் கர்நாடக போலீசாரை தடுத்து நிறுத்தினர்.
கர்நாடக போலீசுடன் மோதல்
‘ஜெயலலிதா ‘இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளதால் அவரை உங்களிடம் (கர்நாடக போலீசாரிடம்) ஒப்படைக்க முடியாது. ஒருவேளை நீங்கள் அவரை அழைத்து சென்றால் எங்களுக்கு எழுத்துப் பூர்வமாக எழுதி தரவேண்டும். அவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு பொறுப்பு கர்நாடக போலீசார் என்று குறிப்பிட வேண்டும்' என்று கூறினர். அதற்கு கர்நாடக போலீசார் எழுத்துப் பூர்வமாக எதுவும் எழுதித்தர முடியாது என்றும், வேண்டும் என்றால் சிறை அதிகாரியிடம் அதுபோன்ற கடிதத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியபடி ஜெயலலிதா அருகில் நெருங்கினர்.
சிறையில் தள்ளு, முள்ளு
அவர்களை தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள சிறைக்குள் அழைத்து செல்ல ஜெயலலிதாவை கர்நாடக போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு தேசிய பாதுகாப்பு படை அதிகாரி எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான காரில் அவர் ஏற்றப்பட்டு ஜெயில் வாசலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நடந்து சென்ற ஜெயலலிதா
நுழைவு வாயிலில் இருந்து ஜெயலலிதா சிறைக்குள் நடந்து சென்றார். ஜெயில் நுழைவு வாயில் வரை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் சென்று, சிறை அதிகாரிகளிடம் ஜெயலலிதாவை ஒப்படைத்தது குறித்து கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து நேற்று இரவு சென்றனர். நீதிமன்ற வாசலில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும், கர்நாடக போலீசாருக்கும் நடந்த லேசான தள்ளு, முள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.