ஜெயநகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.. த்ரில் போட்டியில் பாஜக தோல்வி!
Recommended Video
பெங்களூர்: ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார்.
கடந்த மாதம் 12ம் தேதி நடந்த கர்நாடக பொதுத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளரும் பெங்களூர் ஜெயநகர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவருமான விஜயகுமார், பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஜெயநகருக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் சார்பில் பக்கத்து தொகுதியான பிடிஎம் லேஅவுட் எம்எல்ஏவாக உள்ள ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும், பாஜக சார்பில் விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத்தும் போட்டியிட்டனர்.
ஆரம்பம் முதல் லீடிங்
தேவகவுடாவின் கட்டளையை தொடர்ந்து மஜத வேட்பாளர் போட்டியில் இருந்து தூர விலகிக்கொண்டார். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதல் சுற்று முடிவில், சவுமியா ரெட்டி 3749 வாக்குகளும், பிரகலாத் 3322 வாக்குகளும் பெற்றிருந்தனர். பிறர் 151 வாக்குகள் பெற்றிருந்தனர். எனவே, முதல் சுற்று முடிவில் சவுமியா ரெட்டி 427 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இது பெரிய அளவுக்கான முன்னிலை இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கையில் சுவாரசியம் காணப்பட்டது.
த்ரில் வாக்கு எண்ணிக்கை
ஆனால், இதன்பிறகு பாஜக வேட்பாளர்-காங்கிரஸ் வேட்பாளர் நடுவேயான வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் த்ரில் ஏற்பட்டது. இருப்பினும், இறுதியில், சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகலாத் 51,568 வாக்குகள் பெற்றார். பிறர் 1861 வாக்குகளை பெற்றனர். 2889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சவுமியா ரெட்டி.
அமைச்சர் பதவி
ராமலிங்க ரெட்டி கடந்த சித்தராமையா ஆட்சியில் உள்துறை அமைச்சராகும். இப்போதைய காங்-மஜத ஆட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. எனவே மகள் வெற்றியை கொண்டு அமைச்சர் பதவியை பெற காய்நகர்த்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
குறைந்த வாக்கு எண்ணிக்கை
பணக்காரர்களும், படித்தவர்களும் அதிகம் வசிக்கும் ஜெயநகர் தொகுதியில் இந்த தேர்தலின்போது மந்தமாகவே மக்கள் வாக்களித்திருந்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 55 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். சமீபத்தில் நடந்த பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி இடைத் தேர்தலில் மும்முனை போட்டி இருந்தும் கூட காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சட்டசபையில் காங்கிரஸ் பலம் 79ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ சித்து பீமப்ப நியாம்கவுடு சாலை விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அந்த தொகுதி காலியாக உள்ளது.