பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல்.. மந்தமான வாக்கு பதிவு.. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெற்றது.
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், பெங்களூரிலுள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயநகர் தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு மட்டும் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜராஜேஸ்வரி நகரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினைக்காகவும், ஜெயநகர் தொகுதியில், பாஜக வேட்பாளரான விஜயகுமார் பிரச்சாரத்தின்போது மரணமடைந்ததாலும், தேர்தல் நடைபெறவில்லை.
இதையடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றார். இன்று ஜெயநகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 216 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இத்தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நடுவே நேரடி நிலவியது. மஜத சார்பில் கலேகவுடா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மஜத தலைமை, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததால், அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டார்.
பாஜக சார்பில், மறைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் களமிறங்கியிருந்தார். காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவரும், முந்தைய ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான ராமலிங்க ரெட்டி மகள் சவும்யா ரெட்டி போட்டியிட்டார். மாலை 5 மணி நிலவரப்படி இங்கு 51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
நாளை மறுநாள் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.